தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த 1946ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை சில குழுக்களால் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியான பேச்சுவார்த்தை இடம்பெற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று (19.10.2022) கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மயில்வாகனம் நிமலராஜன் சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளராக இருந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் க.தேவராஜா, அம்பாறை – கொண்டைவெட்டுவான் படை முகாமில் வைத்து முதலாவதாக கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் 37 பேரும், சிங்கள ஊடகவியலாளர்கள் 8 பேரும், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 2 பேருமாக மொத்தம் 47 ஊடகவியலாளர்களை இந்த நாட்டில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சி செய்த ஜனாதிபதி யாராக இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பில் இது வரை நீதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் சர்வதேசத்தின் ஊடாக பல ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஜெனிவாவில் நீதி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். இப்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
இவர் சாதாரண ஒரு வேட்பாளராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற முடியாது தோல்வியுற்று அதன் பின்னர் தேசியப்பட்டியில் உள்நுழைந்து இன்று மாபெரும் அதிஷ்டம் கிடைத்த ஜனாதிபதியாக இருக்கின்றார்.
உண்மையிலேயே அவரின் காலத்தில் கூட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அவருக்குத் தெரியும். பொருளாதாரம் இல்லாது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது.
இந்தநிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் எமது ஜனாதிபதி ரணில்.
தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும், என்ன வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் நன்கு அறிவார். ஆனால் காலத்தை நீடித்து புலம்பெயர்ந்த மக்களின் நிதியை கொண்டு வருவதற்கான நாடகம் அரங்கேறுகின்றது.
அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ரணில் தலைமையில் அமைச்சரவை உப குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது வேடிக்கைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளார்.

