சென்னை மாநகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பாதுகாப்பாற்ற முறையில் பயணம் செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மாணவர்கள் படிக்கட்டிலும், பக்கவாட்டிலும் தொங்கி பயணம் செய்வது தொடர்கிறது.
இதனால் பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ்சில் தொங்கி பயணிப்பதை தடுக்க மாநகர போக்குவரத்து கழகம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விதிகளை பின்பற்ற மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளார்.
வழித்தடங்களில் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ, உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி பாதுகாப்பாற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் டிரைவர், கண்டக்டர் பேச்சை கேட்காமல் மீறி செயல்பட்டு நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் பஸ்சை நிறுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அவசர எண் 100-க்கோ புகார் தெரிவிக்க வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

