மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 19-ம்! – புகழேந்தி தங்கராஜ்!

277 0

சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் – ‘விரைவில் தி.மு.க. ஆட்சி’ – என்று அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க. ஸ்டாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிறவரை கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் நீயா நானாவுக்கு இடையே ஒலித்த தனி ஆவர்த்தனம் – தளபதியின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் ரத்தச் சேறாக்கப்பட்ட பிப்ரவரி 19 நெருங்குகிற நிலையில் ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்போதே குலை நடுங்குகிறது.

செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில் ஒரு உயர்நீதிமன்றத்துக்கே நீதி மறுக்கப்படுவதைக் குறித்து எழுத வேண்டிய கடமை எனக்கிருப்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கிய கறுப்புதினம் 19.02.2009. தாக்குதல் நடந்த அடுத்த ஒருமணிநேரத்தில் சென்னை அரசுப் பொதுமருத்துவமனையில் காயம்பட்ட வழக்கறிஞர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல சகோதரர் வெள்ளையனுடன் போயிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

போலீஸ் தாக்குதலில் காயமடைந்திருந்த வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் நாங்கள் நுழைந்தபோதே எங்கள் நாசித்துவாரங்களைத் தாக்கியது ரத்தவாடை. வார்டு முழுக்க அடிபட்ட வழக்கறிஞர்கள். கட்டில்கள் மீது தரையில் என்று வார்டின் ஒவ்வொரு மூலையிலும் அவர்கள்….. அவர்கள்…. அவர்கள் மட்டுமே! வலிதாங்காமல் அவர்கள் எழுப்பிய வேதனை ஒலியால் போர்முடிந்த நொடியிலான போர்க்களம் போலவே இருந்தது அந்த வார்டு.

உறவினர்கள் யாரும் வந்து சேராத நிலையில் அதிகமாகக் காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு உறவினர்களாகவே மாறி உதவிக் கொண்டிருந்தார்கள் கொஞ்சமாய்க் காயமடைந்திருந்த வழக்கறிஞர்கள். தொழில் ரீதியான நட்பு அவர்கள் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்கிற அளவுக்கு வலுவானதாக இருந்தது. அநேகமாக அவர்கள் அனைவரது வெள்ளை உடைகளிலும் ரத்தக் கறை….. பலரது உடைகள் கிழிந்திருந்தன.

தங்கை அங்கயற்கண்ணி வடிவாம்பாள் உள்ளிட்டோரைத் தேடுவதற்குள் வலிதாங்காமல் துடித்துக் கொண்டிருந்த பல நண்பர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. அவர்களில் பலரும் ஈழத்தில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்கள்…. ஜனவரி 29 முதல் 31 வரை முத்துக்குமார் என்கிற அணையா நெருப்பை அடைகாப்பதில் துணை நின்றவர்கள்…… அந்தக் கறுப்பு நெருப்பின் உடலை எடுத்துச்சென்றபோது ஆவேச முழக்கங்களுடன் அணிவகுத்தவர்கள்.

இனப்படுகொலையையும் இனப்பகைவர்களையும் இனத் துரோகிகளையும் எதிர்த்து சாதி மத அரசியல் எல்லைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒன்றுபட்டு நின்று ‘முதல் குரல்’ எழுப்பியவர்கள் வழக்கறிஞர்கள்தான்! தமிழகமெங்கும் நீதிமன்றங்களின் முன்னிருக்கும் வீதிகளில் நின்று போராடினார்கள் அவர்கள். இனப்படுகொலை மேலும் உக்கிரமடைந்தபோது வழக்கறிஞர்களின் போராட்டமும் தீவிரமடைந்தது. சாலை மறியல் ரயில் மறியல் என்று விரிவடைந்தது.

சென்னை வழக்கறிஞர்களைக் குறித்துத் தனியாகக் குறிப்பிடவேண்டிய அவசியமே இல்லை. இந்த விஷயத்தில் அவர்களுக்குப் பிரத்யேகச் சான்றிதழ் எதுவும் தேவையில்லை. தமிழினத்துக்கான போராட்டங்களில் எப்போதும் முன்நிற்கிற அவர்கள் அப்போதும் முன்நின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் ராணுவ அலுவலகத்தையே முற்றுகையிடக்கூட அவர்கள் தயங்கவில்லை.

வழக்கறிஞர்கள் போராட்டம் ஒருநாளில் முடிந்துவிடும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும் – என்கிற கணிப்புகளெல்லாம் பொய்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தபடியே இருந்தது. நாளாக நாளாக வலுவடைந்தும் வந்தது.

இனப்படுகொலை நிற்கும்வரை வழக்கறிஞர்கள் போராட்டம் ஓயாது – என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்டபிறகே அவர்களை அடக்கி ஒடுக்குவது என்கிற முடிவை அப்போதிருந்த தி.மு.க. அரசு எடுத்திருக்க வேண்டும். அதன்மூலம் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். (‘எடுத்திருக்க வேண்டும்’ ‘வந்திருக்க வேண்டும்’ – என்று சொல்வது ‘எஸ்கேப்பிஸம்’. ‘தமிழக அரசு அப்படியொரு முடிவுக்கு வந்தது’ – என்று சொல்வதுதான் சரி.) அந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்ட நாள் தான் – 19.02.2009.

அந்தச் சமயத்தில் முதல்வர் கருணாநிதி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தார் என்பதையும் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் அந்த பிப்ரவரி 19ம் தேதி ஆழமான வடுவாக மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன. நடத்தப்போகும் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுவதைப் போல RAPID ACTION FORCE மற்றும் RIOT CONTROL POLICE படையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய போலீஸ் படையுடன் உயர் அதிகாரிகளும் இருந்தனர். தாக்குதலுக்கு அவர்கள் தயாரானது இப்படித்தான்!

அளவுக்கதிகமான போலீசார் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டதும் போராட்டம் நடத்துபவர்களிடம் ஒரு கலக்கம் ஏற்படுவது வழக்கம். பாதிப்பேராவது கலைந்துவிடுவார்கள் அல்லது காணாது போய்விடுவார்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அப்படியெல்லாம் அஞ்சி நடுங்கிக் கலைந்துவிடவில்லை. அவர்களது அந்த அஞ்சாமை கண்டு எரிச்சலடைந்ததோ என்னவோஇ அவர்களுக்குப் பாடம் கற்பிக்கிற நேரடி நடவடிக்கையில் இறங்கியது காவல்துறை.

அறவழியில் போராடியவர்களை அடித்துத் துவைப்பதற்கு ஏதாவதொரு காரணம் காட்டியாக வேண்டுமே! அப்படியொரு காரணமும் கிடைத்தது காவல்துறைக்கு! சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசிய வழக்கறிஞர்களைக் கைது செய்கிற நடவடிக்கை – என்கிற போர்வையில் தாக்குதல் தொடங்கப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே வெறிகொண்டவர்களைப் போல போலீசார் தாக்கத் தொடங்க அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள் வழக்கறிஞர்கள். அப்படியொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே மேற்கொள்ளப்படுமென்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

அது ஒரு ஈவிரக்கமில்லாத தாக்குதல். போராடுவாயா ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுப்பாயா – என்று கேட்டுக் கேட்டே அடிப்பதைப் போன்றிருந்தது.

அந்த வெறித்தனமான தாக்குதல் சுமார் 4 மணி நேரம் நீடித்தது. தாக்குதலை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதற்காக வெளியே வந்த நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனைக் கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. அவரது தலையிலிருந்து ரத்தம் சிந்த . அவர் மேலதிகமாகத் தாக்கப்பட்டுவிடாதபடி வழக்கறிஞர்கள் அரணாக நின்று பாதுகாத்தனர். வழக்கறிஞர்களின் பேராண்மையைப் பறைசாற்றிய நிகழ்வு அது.

போலீஸ் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர்களில் 125 பேருக்கும் மேல் தலையில் காயமடைந்தவர்கள் என்று வழக்கறிஞர் சங்கம் பின்னர் அறிவித்தது. அதுபோதாதென்றுஇ நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் வாகனங்களையும் போலீசார் வெறிபிடித்தவர்களைப் போல அடித்து உடைத்தனர்.

போலீசாரின் அந்தத் தாக்குதல் மிக மிகத் தெளிவான – திட்டமிட்ட தாக்குதலாக இருந்தது. அது அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரியவில்லை.

நடந்தது என்ன என்பதை மூத்த வழக்கறிஞர் வைகை அம்பலப்படுத்தியது இப்போதும் நினைவிருக்கிறது.
‘அந்தத் தாக்குதல் அப்போதைய சூழ்நிலையில் திடீரென முடிவெடுத்து மேற்கொள்ளப்பட்டதில்லை. ஆயுத போலீஸ் அதிரடிப் படை போன்றவை அரசின் முன் அனுமதியில்லாமல் குவிக்கப்பட்டிருக்க முடியாது. கமாண்டோ பிரிவினரை நடவடிக்கையில் ஈடுபடுத்த காவல்துறை தலைவரின் முன் அனுமதி தேவை. ஆயுதப் படையினரை ஈடுபடுத்த காவல்துறை ஆணையரின் அனுமதி தேவை. நிச்சயமாக இது ஒரு திட்டமிட்ட தாக்குதல்’ என்பது வைகையின் குற்றச்சாட்டு.

இப்படியொரு திட்டமிட்ட தாக்குதலுக்கு என்ன காரணம் – என்பதையும் தெளிவாக எடுத்துச் சொன்னார் வைகை.
‘இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தருவதை மத்திய மாநில அரசுகள் விரும்பவில்லை. இந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பது அவர்களது எண்ணம். அதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது….’ என்றார் அவர்.

நீதிமன்றத் தாக்குதல் நடந்த சமயத்தில் முதல்வர் கருணாநிதி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தார். அன்றைய நிலையில் ஆட்சி அதிகார லகான் யார் கையில் இருந்தது என்பது திமுகவின் கடைசி உடன்பிறப்புக்குக் கூடத் தெரியும். தளபதி ஸ்டாலின் அப்போது துணைமுதல்வராக ஆக்கப்படாவிட்டாலும் கூட லகான் அவர் கையில்தான் இருந்திருக்க வேண்டும். இளவரசர் கையில் இல்லாமல் வேறெவர் கையில் அது இருந்திருக்கும்!

இனப்படுகொலை விஷயத்தில் தமிழக ஊடகங்களும் கள்ளமௌனம் சாதித்தன. அது தொடர்பான செய்திகளையும்இ அதற்கு எதிரான நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்தன. பல்லாயிரம் இளைஞர்களை ஒன்று திரட்டிய முத்துக்குமாரின் உயிர்த் தியாகம் குறித்த செய்திகள் கூட திட்டமிட்டு மறைக்கப்பட்டன. ஒரு லட்சம் பேருக்கு மேல் அணிவகுத்த முத்துக்குமாரின் இறுதிப் பயணம் மக்கள் பார்வையிலேயே படாதபடி மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதை எந்த ஊடகமும் கண்டிக்கவில்லை.

மருத்துவமனையிலிருந்த கலைஞர் இதற்கெல்லாம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அதிகார லகானைக் கையில் வைத்திருந்த ஸ்டாலின்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இது என்னுடைய யூகம் மட்டுமல்ல…. திட்டவட்டமான குற்றச்சாட்டு! இனப்படுகொலை விஷயத்தில் ஸ்டாலின் மீது முன்வைக்கிற குற்றச்சாட்டுகளில் உயர்நீதிமன்ற விவகாரத்தையும் சேர்த்தாக வேண்டும்.
அரசு நெருக்கடி கொடுத்தும் கூட ஊடகங்களால் வழக்கறிஞர்கள் போராட்டத்தை மூடிமறைக்க முடியவில்லை. அந்தப் போராட்டம் காட்டுத்தீ போல் பரவியது. அது தொடர்ந்தால் தமிழகம் முழுக்க போராட்டத் தீ பரவும் என்பது மத்திய உளவுத் துறைக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். ஒட்டுமொத்தத் தமிழகமும் களத்தில் இறங்கிவிட்டால் இனப்படுகொலையை நிறுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும் என்பதையும் அதன்மூலம் சோனியாகாந்தியின் ‘கனவுத் திட்டம்’ நிறைவேறாதுபோய்விடும் என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள்.

அந்த அடிப்படையில்தான் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்த மாநில அரசை மத்திய அரசு வற்புறுத்தியிருக்க வேண்டும்….. ‘எப்படியாவது அந்தப் போராட்டத்தை நசுக்குங்கள்’ என்று கூறியிருக்க வேண்டும். மத்தியில் ஆண்டவர்களின் உத்தரவை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலையில் தி.மு.க. இருந்திருக்க வேண்டும்…. காங்கிரஸின் தயவில் அது பதவி நாற்காலியில் குந்திக் கொண்டிருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்……
நான் சொல்வது உண்மையா இல்லையா?

ஈழ உறவுகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்களால் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுவிடும் என்கிற அச்சத்தாலன்றி வேறெதற்காக பேராண்மை பொருந்திய எங்கள் வழக்கறிஞர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்! சுப்பிரமணியன் சுவாமிக்காகவா?

இனப்படுகொலையில் திமுக மீதும் கலைஞர் மீதும் ஸ்டாலின் மீதும் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவது நியாயமா – என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிற நண்பர்களிடம் நான் கேட்க நினைப்பது இதைத்தான்!

‘வழக்கறிஞர்களுக்குத் தக்க பாடம் புகட்டுங்கள்’ என்கிற உத்தரவு ஸ்டாலினிடமிருந்து வந்திருக்குமா? மருத்துவமனையிலிருந்த கலைஞர் கருணாநிதியிடமிருந்து வந்திருக்குமா? அல்லது திமுகவுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதலை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக காவல்துறையே அப்படிச் செய்ததா?

இனப்படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்களின் குரலை ஒடுக்கியதன் மூலம் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலை தடங்கலின்றித் தொடர வழிவகுத்தவர் ஸ்டாலின் இல்லையெனில் அது வேறு யார்? தி.மு.க.வில் அவ்வளவு பலம்பொருந்திய இன்னொருவர் இருந்தாரா என்ன!
(தொடர்ச்சிஇ அடுத்த இதழில்…)