உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறைக்கால பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

76 0

உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறையை பெற்றுக்கொள்ளும் போது செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை உப அஞ்சல் நிலையப் பொறுப்பதிகாரிகள் சேவை யாப்புக்கு அமைய உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரியால் தமது மகப்பேற்றின் போது தமது செலவில் பதில் பணிகளுக்கு ஒருவரை கடமையில் ஈடுபடுத்துவதற்காக தாபனக்கோவையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மகப்பேற்று விடுமுறை பெற்றுக்கொள்வதற்கான உரித்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் பதிலீட்டுக் கொடுப்பனவாக 30 நாட்களுக்கு சமமான கொடுப்பனவு வழங்கப்படும்.

குறித்த மகப்பேற்று விடுமுறைக் காலத்தில் பதில் கடமைக்கு ஒருவரை ஈடுபடுத்த வேண்டியமையால், பெரும்பாலான உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகள் தமது மகப்பேற்று விடுமுறையை 30 நாட்களுக்கு மட்டுப்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார தாபனம் மற்றும் ஏனைய மருத்துவ பரிந்துரைகளுக்கமைய குழந்தை பிறந்து குறைந்தது 6 மாதங்களுக்கு தாய்ப்பாலூட்டல் அவசியமாகும்.

அதற்கமைய, உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 30 நாட்களுக்கான கொடுப்பனவை 84 நாட்களுக்கு செலுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.