கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒகஸ்ட் 31ஆம் திகதி வரையில் 4 இலட்சத்து 96 ஆயிரத்து 430 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வருகையின் மூலம் நாட்டுக்கு 893 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
2018ஆம் ஆண்டில் 23 இலட்சத்து 33 ஆயிரத்து 769 சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டுக்கு வந்திருந்ததுடன், அவர்கள் மூலமாக 3,925 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியது.
2019இல் 19 இலட்சத்து 13 ஆயிரத்து 702 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும், அதன் மூலமாக 4,381 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்ததனால், சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டுக்கு கிடைக்கும் வருமானமும் வெகுவாக குறைந்தது.
இதன்படி, 2020இல் 5 இலட்சத்து 70 ஆயிரத்து 704 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததாகவும், அவர்கள் ஊடாக 3,607 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வருமானம் குறைந்துள்ளதாகவும், 2021இல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 495 ஆகவும், அதன் வருமானம் 682 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைவடைந்து காணப்பட்டது.
இவ்வாறு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் ஒகஸ்ட் மாத இறுதி வரையில் 4 இலட்சத்து 96 ஆயிரத்து 430 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், 893 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.