ஜெனிவாவில் எமக்கு ஏற்பட்ட தோல்வி அவமானத்துக்குரியது

118 0

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு ஏற்பட்ட தோல்வி அவமானத்துக்குரியதாகும்.

கடந்த காலங்களில் எமக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் நடுநிலை வகித்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புனர்வாழ்வு சட்டமூலத்தை மீளாய்வு செய்யவேண்டும் என ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இலங்கைக்கு ஏற்பட்டது அவமான தோல்வியாயாகும்.

இதற்கு முன்னர் எமக்கு எதிராக பிரேரணை வந்தபோது 11 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

ஆனால் இம்முறை அது 7ஆக குறைவடைந்துள்ளது. அதேபோன்று வாக்களிப்பில் கடந்த முறை 24 நாடுகள் நடுநிலையாக இருந்தபோதும் இம்முறை 20 நாடாக குறைந்துள்ளது.

அதேபோன்று இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியத்தின் மூலம் எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவ்வாறான எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. சீனா எமக்கு ஆதரவளிக்கும் என்பது நாங்கள் அறிந்த விடயம்.

மேலும் ஜெனிவாவில் எமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பொருளாதார மோசடி குற்றச்சாட்டு, இது முதல் தடவையாக கொண்டுவரப்பட்டதாகும்.

எமது நடவடிக்கை காரணமாகவே நாங்கள் தேவையில்லாத பிரச்சினையில் சிக்கி இருக்கின்றோம்.

புனர்வாழ்வு சட்ட மூலம் பயங்கரவாத தடைச்சட்டம், இனவாத செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும்.

புனர்வாழ்வு சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியன உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த விடயங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வு சட்டம் மூலம் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக போராடுபவர்களை அடக்குவதற்கு கொண்டுவந்த சட்டமாகவே காண்கின்றோம்.

2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சிறிய போராளிகள், சாதாரண மக்கள் என 12ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இறுதி நேரத்தில் இராணுவத்தில் சரணடைந்தவர்கள். என்றாலும் அன்று வெற்றி மகிழ்ச்சி காரணமாக யாரும் அதனை சவாலுக்குட்படுத்தவில்லை.

அத்துடன் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட விடயங்கள் அல்ல. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக ஆராய்ந்து, புனர்வாழ்வு சட்ட மூலத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றார்.