மட்டு ஆரையம்பதியில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓட்டம்

131 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரத்தினம் சோதிமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடித்து வேறு பிரதேசத்தில் வாழ்ந்துவருவதுடன் கணவனும் மனைவியும் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவதுடன் கணவன் மனைவியைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம்  பேசி அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  நேற்று இரவு 8 மணியளவில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.