மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப் பயணிக்கிறோம் – கலாநிதி அகிலன் கதிர்காமர்

97 0

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எமக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நாம் இப்போது மக்கள் சார்பற்ற பொருளாதாரக்கொள்கைகளை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் விசனம் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதத்தொடக்கத்தில் எட்டப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அந்நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கமும் மத்திய வங்கியும் நம்பிக்கை வெளியிட்டிருந்தது. இருப்பினும் இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய காலஎல்லையை நிர்ணயித்துக்கூறமுடியாது என்றும், அது கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன்மறுசீரமைப்பு ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிட்டுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதா என்பது குறித்தும், அதன்விளைவாகப் பொதுமக்கள்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் வினவியபோதே கலாநிதி அகிலன் கதிர்காமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பை விமர்சனத்திற்கு உட்படுத்திய அவர், அதன்பின்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதென்றும் அதனிடமிருந்து வெகுவிரைவில் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதென்றும் மேற்கொள்ளப்பட்ட தவறான பகுப்பாய்வுகளே இதற்குப் பிரதான காரணமெனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கடன்களை மீளச்செலுத்தமுடியாது என அறிவித்ததன் விளைவாக தற்போது கடனுதவிகளைப் பெறுவதில் இந்தியாவிடம் மாத்திரம் தங்கியிருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள அதேவேளை, ஜப்பான் போன்ற நாடுகளிடம் கடனுதவிகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பான இணக்கப்பாடு பூர்த்தியடைந்ததன் பின்னரே ஏனைய நாடுகளிடமிருந்து கடனுதவிகளைப் பெறமுடியும் என்றும், அப்போதும் அந்நாடுகள் இலங்கைக்குக் கடன் வழங்க விரும்புமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமே என்றும் சுட்டிக்காட்டிய கலாநிதி அகிலன் கதிர்காமர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இப்போது நாம் மக்கள் சார்பற்ற பொருளாதாரக்கொள்கைகளை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்று விசனம் வெளியிட்டார்.