இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடிவிற்குக்கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்

207 0

நோர்வேயின் வெளிவிவகார சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களின் ஓரங்கமாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தின் செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு (தூதரகத்தை மூடுவதற்கு) அந்நாடு தீர்மானித்துள்ளது.

 

நோர்வே அரசாங்கமானது வெளிநாடுகளிலுள்ள அதன் இராஜதந்திர வலையமைப்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள நோர்வே தூதரகங்களை மேலும் வலுப்படுத்துவதையும் ஓரங்கமாக உள்ளடக்கியிருக்கின்றது.

அதன்படி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் உள்ளடங்கலாக 5 நாடுகளிலுள்ள நோர்வேயின் இராஜதந்திர செயன்முறைகளை நிரந்தரமாக முடிவிற்குக்கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இத்தீர்மானம் இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் தெரிவித்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான நட்புறவை மேம்படுத்துவதில் நோர்வே அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.