பளையில் காணி பிடித்தோர் பட்டியல் வெளிவந்தது!

148 0

பளைப் பகுதியில் உள்ள காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகள் ஆளும் கட்சி  அரசியல் செல்வாக்கினையுடைய அரசியல்வாதிகள் மற்றும்  அரச அதிகாரிகள் 22 பேருக்கு 110 ஏக்கர்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

பளைப் பகுதியில் உள்ள காணிச் சீர் சீருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான நிலத்தை நிலம் அற்ற ஏழை மக்களிற்கு அரை ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்குமாறு நீண்ட காலமாக மாவட்டச் செயலகங்கள் ஊடாக கோரிக்கை விடப்பட்டபோதும் நிலத்தை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் சுதந்திரக்கட்சியை சேர்ந்தவருமான கொக்குவில்

தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் அதிபர்  யோகராஜன் ஊடாக தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபார்சில் 22 பேருக்கு தலா 5 ஏக்கர் நிலம் வீதம் வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இதில் யோகராஜன் மற்றும் அவரது மனைவி  மகள், மருமகன் என நால்வரின் பெயரிலும் காணி வழங்கப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸ் மற்றும் அவரது  மனைவிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆயுள்வேத வைத்தியரும் போதனா வைத்தியசாலை பதிவாளருமான ஜெலன்   மற்றும் அவரது  மனைவி ஆகியோருக்கும், ஓய்வு பெற்ற கணக்காளர் இராசநாயகம் தங்கராஜசிங்கம்,யாழ்நகரிலுள்ள முன்னணி விடுதியான பிள்ளையார் ஹோட்டல் உரிமையாளர்  இரத்தினசிங்கம், பதிவாளரும் யாழ்ப்பாணம் காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் உத்தியோகத்தரின் உடன் பிறந்த சகோதரருமான  புத்தூரைச் சேர்ந்த  கோபாலகிருஸ்ணன், சங்கானை மக்கள் வங்கி முகாமையாளர், மத்திய கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரியும் வடமராட்சியைச் சேர்ந்தவருமான மணிவண்ணன் ஆகியோருடன் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த தங்கராஜசிங்கம் ஆகியோருக்கே  இந்த நிலங்கள் உணவு உறபத்திக்கு என்னும் பெயரில்  வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது