7 உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு – பசந்த யாப்பா அபேவர்தன

105 0

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் வெள்ளை அரிசி,வெள்ளை நாட்டரிசி,சிவப்பு பருப்பு,வெள்ளை சீனி மற்றும் நெத்தலி உள்ளடங்களாக 7 உணவு பொருட்களின் விலை இன்று வெள்ளிக்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லங்கா சதொச தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சதொச வலையமைப்பிற்கமைய இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 10 ரூபாவினாலும்,இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 19 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 31ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 25 ரூபாவினாலும், ஒருகிலோகிராம் வெள்ளை பூண்டின் விலை 155 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோர் குறைந்த விலைக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இதுவரை ஏற்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் தோட்ட தொழிலாளர்கள் உள்ள பிரதேசங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 310 ரூபாவுக்கு விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.