பதுளையில் வெடி பொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது

95 0

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் வெடி பொருட்களுடன் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்களை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதுளை விஷேட பொலிஸ் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பதுளை குற்றத்தடுப்பு பொலிசாரும், பதுளை விசேட பொலிஸ் பிரிவினரும் இணைந்து பதுளை கெந்தகொல்ல பகுதிக்கு விரைந்து, சந்தேகத்துக்கிடமான வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது மிகவும் சூட்சுமமான முறையில், மறைத்து வைக்கப்பட்டு இருந்த டெட்டனேட்டர் 5, ஜெலட்டின் குச்சிகள் 3, 6 மீற்றர் வயரும், அமோனியம் 2 கிலோ 630 கிராமும்,வெடிமருந்து 967 கிராமும், கஞ்சா போதைப் பொருள் 10 கிராமும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் 29 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.