சட்டவிரோதமான முறையில் படகு மூலம் கனடா செல்ல இருந்த 11 இலங்கையர்கள் கடந்த திங்கட்கிழமை கேரளா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வருகை தந்த இருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களை தொலைபேசி சமிக்ஞைகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுத்ததில் மேலும் 9 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த 9 பேர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த அகதிகள் எனவும் அவர்கள் தென் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து மீன்பிடி படகில் கனடா செல்வதற்காக கொழும்பில் உள்ள பிரபல முகவர் நிறுவனத்துக்கு தலா 2.5 இலட்சம் ரூபா கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்களை தேடி கியூ பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

