பழனிக்கு வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டார். அதன் பிறகு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. கள்ளக்குறிச்சி மாணவி மர்மச்சாவு தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும்.
வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே சிறையில் அடைத்தது முறையல்ல. இந்தியாவில் 75 சதவீதம் பேர் இதே போல்தான் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதல்-அமைச்சராக செயல்படுகிறார். இதனால் மக்களிடம் அவருக்கு நாள் தோறும் மதிப்பு அதிகரித்து வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போது சுங்க கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும்.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பழனிக்கு வந்த கார்த்தி சிதம்பரத்தை கட்சி நிர்வாகிகள் வக்கீல் உதயசங்கர், சர்தார்கான், ஹக்கீம்ராஜா, கவுன்சிலர் பத்மினி, முருகானந்தம் உள்பட பலர் வரவேற்றனர்.

