அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். எனவே இவ்விடயத்தில் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டும்.
அதேவேளை அவர்கள் செயற்படும் முறையை அடிப்படையாகக்கொண்டே எதிர்காலத்தில் அவர்களுக்கான மதிப்பீடு வழங்கப்படும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு உரியவாறான தீர்வைக் கண்டறியவேண்டிய பொறுப்பு அனைத்துத்தரப்பினருக்கும் இருக்கின்றது.
சட்டவாக்கத்துறைசார் உறுப்பினர்கள் இப்பொறுப்பை நிறைவேற்றும் முன்னோடிகளாகச் செயற்படவேண்டும். இதனை நாம் பலமுறை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
எனவே இப்போது அரசாங்கமும் சிவில் சமூக அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இவ்விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திவருவதை நாம் நேர்மறையான விடயமாகவே கருதுகின்றோம்.
எனவே இவ்விடயத்தில் அடிப்படை நடவடிக்கைகளை பாராளுமன்றமே மேற்கொள்ளவேண்டும். அதற்கமைய குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால செயற்திட்டங்களை வகுத்து, அவற்றை உரியவாறு செயற்படுத்தவேண்டும்.
மேலும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியமான மக்கள் ஆதரவையும் வெளிப்படைத்தன்மையையும் அடைந்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்கவேண்டும்.
குறிப்பாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை இரத்துச்செய்வதாக இருந்தால் 19 ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய அம்சங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
இதன் அவசியத்தை நாம் ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக்கூறியிருக்கின்றோம். எனவே அதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமையை நாம் பாராட்டுகின்றோம்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அது விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றோம்.
அதேபோன்று இவ்விவகாரத்தில் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
இதில் நாட்டின் அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படும் முறையை அடிப்படையாகக்கொண்டே எதிர்காலத்தில் அவர்களுக்கான மதிப்பீடு வழங்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

