குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதி தேவையா?- பாரதிய ஜனதா அறிக்கை

195 0

தமிழக பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்கு முன்னர் ‘கஜானா காலி’ என்று சொல்லி வாக்கு சேகரித்தபோது, நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை? இந்த வருடம் முதல் காலாண்டில் தமிழக அரசின் வருவாயில் மது விற்பனை வருவாய் 116.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பெருமை கொள்கிறார் நிதி அமைச்சர் தியாகராஜன். வருவாயை பெருக்கும் வேறு எந்த திட்டமும் அரசிடம் இல்லாத நிலையில், மது விற்பனையை அதிகரிப்பதன் மூலமே வருவாய் அதிகரித்து நிதி நிலை சரியாகிறது.

என்பது தெளிவாகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மதுவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளால் அதிக இளம் விதவைகள் உள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் கனிமொழி கூறியதை நாம் மறந்து விட முடியாது. ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற வாசகம் கொண்ட ‘சரக்கை’ அதிகம் விற்று பலரின் ‘விதி’யை முடித்து, குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 தேவையா? என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும். ரூபாய் 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும். கோடிக்கணக்கான தமிழர்கள் வளம் பெறட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.