நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் கூறியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானை 25 வயதுடையது என மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

தனியார் வீடொன்றிலிருந்து அதிவலு கொண்ட மின்சாரத்தைப் பெற்று யானைவேலியில் பொருத்தியமையின் காரணத்தினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகவும் அவரது தாயார் குறித்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாகவும் இவ்வாறு யானைவேலிக்கு அதிவலு கொண்ட மின்சாரம் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் 75 வயதுடைய தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

