வடக்கு, கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெறும் நிலையில், அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுக்கள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
”இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள்.
ஏற்கனவே 1987ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்திய இலங்கை அரசாங்கங்கள் செயற்பட்டதன் அடிப்படையில், ஓர் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட அந்த இடைக்கால நிர்வாகம் எழுத்துருவுடன் முடிவு பெற்றது. காரணம், அந்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அதில் எத்தனை ஆசனங்கள், மற்றும் இந்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.டின்.ரி.எல்.எப் ஆகியவற்றிற்கு ஆசனங்கள் எத்தனை. அதனைவிட தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது என்ற அடிப்படையில் இவ்வாறு இடைக்கால நிர்வாகம் முன்மொழியப்பட்டது.
மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த பத்மநாதன் மற்றும் ரமேஸ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.வி.கே சிவஞானம் ஆகிய மூவரது பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில், சி.வி.கே சிவஞானத்தை ஜே.ஆர் ஜெயவர்த்தன தெரிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவும், இந்த இடைக்கால நிர்வாகம் இடையில் செயலிழந்து போகவேண்டிய நிலை ஏற்பட்டது.

சுனாமி
அதன் பின்னர் சுனாமிக்கான பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சிரான் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் சந்திரிக்காவின் எல்லை மீறிய அதிகார வரம்பு செயற்பாடுகளால் அந்த சுனாமி கட்டமைப்பும் செயற்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.
சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது உலக வங்கியினுடைய ஆதரவு இருந்தது. நிதிகளை கையாள்வதற்கான முறையான கட்டமைப்பு உலக வங்கியின் கண்காணிப்பில் இருந்தது. அதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் என்பது இந்தியாவின் மேற்பார்வையுடன் உருவாக்கப்பட்டது.
தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடைக்கால நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து, அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பது தொடர்பில் பத்திரிகைகளில் பார்க்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் கடந்த 5 ஆம் மாதமே ஒரு முன்மொழிவை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துரையாடியிருந்தோம்.
கடந்த 3 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது இல்லத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பரிந்துரை ஒன்றை நான் முன்வைத்திருந்தேன்.
இதன்போது இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பரிசீலிக்கலாம் மற்றும் ஜனாதிபதி செயலணி தொடர்பிலும் பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அங்கு சொல்லப்பட்டிருந்தது.
இப்பொழுது, தன்னால் எதுவும் செய்ய முடியாது, தன்னுடைய இயலுமையை இழந்து கொண்டு செல்கின்ற டக்ளஸ் தேவானந்தா, தான் இருப்பதாகவும், அக்கறை செலுத்துபவராகவும் காட்டிக்கொள்வதற்காக அவர் இடைக்கால நிர்வாகம் பற்றி பேசுகின்றார்.

புலம்பெயர் நாடுகள்
ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்படுகின்ற போது, மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயமானது, இடைக்கால நிர்வாகம் தொடர்பில் கருத்துக்கள் ஏன் உருவாகுகின்றது என்றால், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற டயஸ்போரா தமிழர்களுடைய முதலீடுகளை உள்ளுக்குள் கொண்டு வருவதுதான் மிக முக்கியமான நோக்கமாக இருக்கின்றது.
பொருளாதார ரீதியில் விழுந்துள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, தற்காலிகமாக ஓர் இடைக்கால நிர்வாகத்தினை உருவாக்கினால், அதில் வடக்கு, கிழக்கு இணைந்ததாக உருவாக்கப்பட்டு அதனை உலக வங்கி அல்லது ஐ.எம்.எப் அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கியினுடைய நேரடி நெறிப்படுத்தலில் நிதி கையாளுகைகள் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது காணப்படும் நடைமுறைகள் போலவே, மத்திய அரசாங்கத்தின் திரைசேரி ஊடாகத்தான் நிதியை பெற்று வடக்கிலோ அல்லது கிழக்கிலோ இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதென்றால், அது நடக்கக்கூடிய காரியமல்ல, அதுவொரு வீண்விரயமான காலமாகவும் மாறும்.
பலம் வாய்ந்த நிதி அமைப்பு ஒன்றின் ஊடாக நிதிப்பொறுப்பு கையளிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், அதன் ஊடாக வரும் டொலரை இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை தரும் வகையிலே கொண்டெடுக்கக்கூடியதாக இருக்கும்.
உலக நாடுகள்
அதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்படுவாரானால், அவர் அந்த நல்லெண்ணமும் சிந்தனையும் கொண்டிருந்தால், ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க இருந்த போது சிரான் பணியகம் உருவாக்கப்பட்டது. அதனை சந்திரிக்கா கலைத்திருந்தார்.

இந்த இடைக்கால நிர்வாகத்தின் நன்மைகள் பலருக்கும் தெரியும். உலக நாடுகளிடம் சென்று கூட்டம் வைத்து, விடுதலைப் புலிகள் காலத்திலேயே எவ்வாறு பணங்களை சேகரிக்கலாம் என்ற தந்துரோபாயம் ரணிலிற்கு தெரிந்ததாக இருந்தது.
இப்பொழுதும் அவர் அதே தந்துரோபாயத்தை டயஸ்போரா அமைப்புக்களை வைத்துக்கொண்டு, தான் தடை நீக்கிய அமைப்புக்கள் ஊடாக நிதியை உள்ளீர்க்கின்ற ஓர் நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருக்கின்றார். அவர் சொல்வது நேர்மையானதுமாக இருந்தால், இடைக்கால நிர்வாகமானது தமிழர் தரப்பிடம் கையளிக்கப்பட வேண்டும்.
தமிழர்கள் அதனை நேர்மையான வழியில் செய்வதற்கு இந்தியாவின் நேரடி நெறிப்படுத்தலும், உலக நிதி நிறுவனத்தின் பாதுகாப்பும் அதற்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது இந்த இடைக்கால நிர்வாகம் இயங்க முடியாது என்பது, காலம் தந்த நிதர்சன உண்மையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தீர்களா என ஊடகவியலாளர் வினவியபோது,அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
‘’எமது கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைப்புக்களுடன் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்கள், தொடர்புகள் இருக்கின்றது .அதனை நான் நிராகரிக்கவில்லை.

எங்களுடனும் சிலர் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இந்த தடைகள் நீக்கப்பட்ட பிற்பாடு, இதுவரை அவ்வாறான அமைப்புக்களுடன் உத்தியோகபூர்வமான பேச்சுக்கள் எவையும் இடம்பெற்றதாக எனக்கு தெரியவில்லை.
எமது கட்சியில், நான் அறியாது யாரும் அவர்களுடன் பேசியிருந்தால் அது தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனாலும், கட்சி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மையானது.’’ என அவர் தெரிவித்திருந்தார்.

