மே 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளின் போது தனியார் பஸ்கள் எரிக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் உக்கிரமடைந்தது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பஸ்கள் கள் ஆத்திரமடைந்த குழுவினரால் தீ முட்டப்பட்டன. இதன்போது சுமார் 50 பஸ்கள் தீ வைக்கப்பட்டது.
வாடகை அடிப்படையில் தாம் அனைத்து நிகழ்வுகளுக்கு வழங்குவதாகவும் துரதிஷ்டமான சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறையில் எரிக்கப்பட்ட பஸ்களுக்கு காப்பீட்டு தொகையோ அல்லது நட்டயீடோ இதுவரையில் வழங்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இது தொடர்பில் நாம் முறைப்பாடு செய்துள்ளோம்.
மேலும் இது தொடர்பில் பக்கச்சார்பின்றி விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என்றும் எழுத்து மூலம் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

