மட்டு. கோழிப்பண்ணையில் 101 கோழிகளை திருடிய இருவர் கைது

107 0

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி பிரதேசத்தில் கோழி பண்ணை ஒன்றில் இருந்து 101 கோழிகளை திருடிச் சென்ற இரு கொள்ளையர்களை நேற்று சனிக்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

நாவற்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்து கடந்த மாதம் 20 ஆம் திகதி இரவு 101 கோழிகள் திருட்டுப்போயிருந்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சிசிடீவி மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நாவற்கேணி பகுதியில் குறித்த இருவரும் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவற்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.