யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருட கால ஆட்சி நிறைவினை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அம்சமாக, கடந்த வருட நடுப்பகுதியில் எழுவைதீவுப் பிரதேசத்தில் ஒன்றிணைந்த மின்சக்தி திட்ட, மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
எழுவைதீவு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசாங்கத்தின் 187 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மின்சாரம் வழங்கும் திட்டம் அமைப்பட்டுள்ளது.
இந்த மின்வழங்கும் திட்டத்தை மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் திறந்து வைத்தனர்.