புதுக்குடியிருப்பு பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகள்

190 0

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் நாளை(08) முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் முழுமையான ஆதரவை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றில் இன்று(07)  இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

‘’அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேல் நடவடிக்கை அத்துமீறியதாகவும் குறித்த பிரதேச செயலாளரை தனிப்பட்ட ரீதியில் அவமதிப்பதாகவும் அரச சேவையையும் மலினப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டமை கண்டனத்துக்குரியது.

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகள் | Protest Activities Pudukudiripu Police

எனவே மேற்படி பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றோம்.

மேலும், மேற்படி பொலிஸாரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கத்தினால் நாளை முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன் எமது ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.