கிளிநொச்சியில் மின்சார சபையின் கொடுப்பனவு தாமதம் : சூரிய சக்தி மின் உற்பத்தி கடன்பெற்ற மக்கள் நெருக்கடிக்குள்

204 0

கிளிநொச்சியில் மின்சார சபையின் கொடுப்பனவு தாமதம் – சூரிய சக்தி மின் உற்பத்தி கடன்பெற்ற மக்கள் நெருக்கடிக்குள் கிளிநொச்சி சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் வங்களில் பல இலட்சங்கள் கடன் பெற்று சூரிய சக்தி மின் உற்பத்தில் ஈடுப்பட்டு வருகின்ற பொது மக்களுக்கு இலங்கை மின்சார சபை அவர்கள் உற்பத்தி செய்கின்ற அலகுகளுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கவில்லை என்றும் இதனால் வங்கிளை கடனை பெற்ற பொது மக்களை மாதாந்த கடன் தவணைப் பணத்தை செலுத்துமாறு நாளாந்தம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் வங்கிகளில் கடனை பெற்ற போது மாதாந்தம் சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் என எதிர்பார்த்த வருமானத்தை நம்பி மாதாந்த தவணைப் பணத்தை ;தீர்மானித்ததாகவும் ஆனால் இலங்கை மின்சார சபையின் கொடுப்பனவு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமாகவும் ஒரு ஒழுங்கின் பிரகாரமும் வழங்கப்படாததன் காரணமாகவும் வங்கிகளில் பெற்ற கடனை சீராக செலுத்த முடியாதுள்ளது எனவும் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கிகள் நாளாந்தம் தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் மூன்று மாதங்கள் கடனை செலுத்தாது விடின் தங்களின் பெயர்கள் கிறிப்ட் பட்டிலுக்குள் சென்றுவிடும் என்று வங்கிகள் எச்சரிப்பதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மின்மானி வாசிப்பாளர் மாதாந்தம் வருகை தருவதில்லை என்றும் அவர்கள் மாதாந்தம் வருகை தருகின்ற போதே தங்களின் சூரிய உற்பத்தி மின் அலகுகள் பதிவுக்கு செல்லும் எனவும் இத் திட்டத்தை பெற்றுக்கொண்ட பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ் பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சூரிய மின் உற்பத்தி மூலம் தாம் பெற்றுக்கொள்கின்ற மின்சாரத்திற்கான  கட்டணத்தை சீராக வழங்க முடியாது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.