வாய்க்கொழுப்பா? பணக்கொழுப்பா?: ஜெயக்குமார் – சீமான் இடையே கருத்து மோதல்

150 0

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. தலைவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் சீமான் சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். தி.மு.க. அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துவருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு ஊரெங்கும் சிலை வைத்து அரசின் கஜானாவை காலி செய்து வருகிறார்.

அதுகுறித்து அவர் விமர்சனம் செய்யட்டும். கடலில் பேனா வைத்தால் மீனவர்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். கடல் நடுவே பேனா வைக்கவேண்டிய அவசியம் என்ன? ஒருவருடைய வாழ்வாதாரத்தை அழித்துத்தான் இதனை அமைக்க வேண்டுமா? இதையெல்லாம் சீமான் ஏன் சொல்லவில்லை? அதற்கு பதிலாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எம்.ஜி.ஆருக்கு நினைவுச்சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். அண்ணாவின் நினைவு சின்னம் மூக்குப்பொடி டப்பாவாம்.

ஜெயலலிதாவின் நினைவு சின்னம் ‘மேக்கப் செட்’டாம். சீமானுக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு இருக்கிறது பாருங்கள். இந்த வாய்க்கொழுப்பை தயவு செய்து தி.மு.க.விடம் காட்டுங்கள். அ.தி.மு.க.விடம் காட்ட வேண்டாம். காட்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். உங்களுக்கு பிற்காலத்தில் உங்கள் கட்சியினர் சிலை வைக்கவேண்டும் என்றால் நீங்கள் இலங்கைக்கு சென்று ஆமைக்கறியை சாப்பிட்டீர்களே… அதன்படி ஆமையைத்தான் வைப்பார்களா?. எனவே தயவு செய்து அ.தி.மு.க.வுடன் விளையாட வேண்டாம்.

எங்களுடைய தலைவர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துகளுக்கு, சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- எனக்கு வாய்க்கொழுப்பு. ஜெயக்குமாருக்கு பணக்கொழுப்பு. எது இப்போது தேவைப்படுகிறது?. ஜெயக்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

என்னிடம் மோத வேண்டாம். என்னை எதிர்த்து பேசும் அவர், பா.ஜ.க.வை எதிர்த்து பேசமுடியுமா?. மறுநாளே ‘ரெய்டு’ வந்துவிடும். உயிரை தவிர இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. எங்களை போல, அ.தி.மு.க. தேர்தலில் தனித்து நிற்கமுடியுமா?

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஜெயித்துகாட்டுவேன் என்று உறுதிதர முடியுமா? தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் எந்த கட்சிக்கும் அந்த திராணி இல்லை. மக்களை நம்புவதால் தனித்து போட்டியிடுகிறோம். மக்கள் என்னை எப்போது நம்புகிறார்களோ அப்போது வெற்றி கிடைக்கட்டும். அவர்கள் மக்களை நம்பாததால் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள். பார்ப்போம், எத்தனை காலம் இந்த ஆட்டம் என்று? இவ்வாறு சீமான் கூறினார்.