மட்டு ஆரையம்பதியில் நிலத்தைத் தோண்டி தங்கம் தேடிய 4 பேர் கைது

76 0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில்  கைவிடப்பட்ட காணி ஒன்றில் தங்கம் தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள  ஆடைத் தொழிற்சாலை தங்குவிடுதிக்கு அருகாமையிலுள்ள  கைவிடப்பட்ட காணி ஒன்றினை களவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு நிலத்தில் தங்கம் இருப்பதாக நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் நிலத்தை தோண்ட பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, சவல் போன் ஆயதங்களை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவாகளை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.