கோட்டாவைவிட ரணில் பாரிய தோல்வியை சந்திப்பார் ஐ.தே.க.வும் அவரால் அழிவடையும் – ஹிருணிகா

317 0

ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வரும் ரணில் விக்கிரமசிங்க , கோட்டாபயவை விட பாரிய தோல்வியை சந்திப்பார் என்பதோடு , அதனால் ஐக்கிய தேசிய கட்சியும் முழுமையான அழிவை சந்திக்கும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ;18 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வரும் ரணில் விக்கிரமசிங்க , கோட்டாபய ராஜபக்ஷவை விட மோசமான தோல்வியை சந்திப்பார்.

அவர் மாத்திரமின்றி இலங்கையில் மிகப் பழைய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும் அழிவடையும்.

நாட்டு மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை. இந்த ஆர்ப்பாட்டங்களின் இறுதி இலக்கு நாட்டை கட்டியெழுப்புவதாக அமைய வேண்டுமே தவிர , வன்முறையாக இருக்கக் கூடாது.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளமை சிறந்த விடயமாகும். அதனை சஜித் பிரேமதாச பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதனை செய்வதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க பொது மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய சிறந்த தோற்றப்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

எரிபொருள் விலைகளை 10 ரூபாவால் குறைக்கின்றனர் என்பதற்காகவும் , அதனைப் பெற்றுக் கொள்ள புதிய முறைமையை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதற்காகவும் அவரை ஆதரிக்க முடியாது என்றார்.