ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

284 0

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை நேற்றைய தினம் முன்வைத்தார்.

சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி இராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தமை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சசிகலா மீதான எதிர்ப்பு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் எந்த நேரத்திலும் துரோகம் செய்யவில்லை என்று கூறினார்.

கட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன் எனவும், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி தன்னை இயக்குகிறது என்பது பொய்யான தகவல் எனவும்,  ஜெயலலிதா மரணம் பற்றி குறித்து நீதி விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும் எனவும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.