வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான அரசியல் மாற்றத்திற்கு இடமளியுங்கள் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

249 0

இராணுவத்தினர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் உரியவாறான கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டும் என்றும், அனைத்துத்தரப்பினரும் வன்முறைச்செயற்பாடுகளிலிருந்து விலகி, அமைதியான முறையில் அரசியல் மாற்றமொன்று இடம்பெறுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்த போராட்டங்கள் படிப்படியாகத் தீவிரமடைந்துவந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 13 ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில், நேற்று அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்ததுடன், சில தினங்களுக்கு முன்னர் அவரது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டிருந்த பின்னணியில், பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு எதிரான போராட்டங்கள் நேற்றைய தினம் மேலும் வலுப்பெற்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் அனைத்துத்தரப்பினரும் வன்முறைச்செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதுடன் அமைதியான முறையில் அரசியல் மாற்றமொன்று இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் அனைத்துத்தரப்பினரையும் உள்ளடக்கியதும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கத்தக்கதுமான பொறிமுறையொன்று அவசியமாகும்.

அத்தோடு உயிருக்கும் உடைமைகளுக்கும் மதிப்பளிக்குமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம். இராணுவத்தினர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், உரியவாறான கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டும் என்று அப்பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.