நாட்டில் இப்போதும் ராஜபக்ஷாக்களின் நிகழ்ச்சி நிரலே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சதி விளையாட்டுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சபாநாயகர் ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதை விடுத்து, மக்களை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தியே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
காரணம் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதற்காகவே வருகை தந்துள்ளார். தற்போது சபாநாயகருக்கு பாரிய பொறுப்பு காணப்படுகிறது. எனவே அவர் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புடன் விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
தற்போது நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர். நாம் அவ்வாறு கூறக் காரணம் யாதெனில் , ஒரு நாட்டின் ஜனாதிபதி விடுமுறை அல்லது மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாடு செல்லும் பட்சத்தில் பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது நாட்டில் பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டிருப்பது அந்த முறைமையின் கீழ் அல்ல.
சபாநாயகர் கைகளில் பாரிய பொறுப்பு காணப்படுகிறது. அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பதல்ல. மாறாக நாட்டை பாதுகாக்கக் கூடிய ஸ்திரமான கட்டமைப்பொன்றை பாராளுமன்றத்தினுள் ஏற்படுத்துவதே அவரது பொறுப்பாகும்.
அதற்கமைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்படும் அதே வேளை, அவரால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
நாட்டில் இப்போதும் ராஜபக்ஷாக்களின் நிகழ்ச்சி நிரலே நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சதி விளையாட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இல்லையெனில் இரத்தக்களரி ஏற்படும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ராஜபக்ஷ குடும்பமே ஏற்க வேண்டும். இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

