கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை

195 0
சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளைநடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய  மூன்று நாட்களும்   பாடசாலைகள் வழமை போல்  நடைபெறும்.

இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom தொழில்நுட்ப கூட்டத்தில் ஆளுநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் அவரவர் வலய புலனக் குழுவில்  வாட்ஸ்அப் குழுவில் அதிபர் ஆசிரியர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

செவ்வாய், புதன், வியாழக்கிழமை நாட்களிலே ஆசிரியர்களையும் மாணவர்களையும் முழுமையாக வரவழைத்து, மாணவர்களுக்கு முழு நேரசூசி வழங்கி, முழு அளவிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார் .

இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில பிழையான வழிநடத்தல்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதனை பொருட்படுத்தாமல் அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த விடயத்திலே ஒத்துழைக்க வேண்டும்.

முடியுமானால் மூன்று மாவட்ட அரசாங்க அதிபர் உடன் பேசி எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகளுக்கு பொது போக்குவரத்து நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

வருகின்ற யூலை மாதம் திங்கட்கிழமை 4 ஆம் திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இந்த மூன்று நாள் பாடசாலை இடம்பெறும்.

மேலும், அதன் பின்பு எவ்வாறு பாடசாலையை நடத்துவது என்று பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.