பாகிஸ்தானுக்கு பயங்கர ஆயுதங்களை கடத்தும் தலிபான்கள்

193 0

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்த படைகள் விட்டுச் சென்ற பெரும்பாலான ராணுவ உபகரணங்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தலிபான்களின் கைகளில் சிக்கியது. இதேபோல் தப்பியோடிய ஆப்கானிஸ்தான் படைகளும் விட்டுச் சென்ற அமெரிக்கா தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தாலிபான்கள் கைப்பற்றினர்.

இந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு கடத்தும் தலிபான்கள், துப்பாக்கி வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவற்றை எல்லைப்பகுதி சந்தைகளில் வெளிப்படையாக வியாபாரிகள் விற்பனை செய்வதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மூலம் பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தெற்கு கந்தஹார் மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டஜன் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை தலிபான் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் மொத்தம் 6 ஏகே 47, 13 கைத்துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக ஆப்கான் மூத்த போலீஸ் அதிகாரி முல்லா அப்துல் கானி தெரிவித்தார்.