பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

146 0

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் 2640 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த முறை கூட்டத்தில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் மூலம் பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சினை உருவாகலாம் என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் மற்றவர்கள் பங்கேற்பதை தடுப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் பொதுக்குழு உறுப்பினரின் பெயர், அவர் வகிக்கும் பொறுப்பு, மாவட்டம் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அடையாள அட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்பதற்காக அழைப்பிதழுடன் வரவேண்டும். மேலும் அவர்கள் அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.