மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

252 0

 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பினை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரண்டு பேரணிகள் நடைபெறமாட்டாது. கல்லடி பாலம் அருகில் இருந்து ஒரு பேரணி மட்டுமே நடைபெறும்.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளவிருப்பதால் முகாமைத்தும் செய்வதில் ஏற்படும் சிக்கல் காரணமாகவே ஒரு பேரணியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 9.00மணிக்கு ஆரம்பமாகும் எழுச்சிப்பேரணி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்ததும் அங்கு பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

அக்கூட்டத்தில் இணைத்தலைவர்கள் அரசியல்கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளனர்.

இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிரேஸ்ட இணைத்தலைவருமான பேராசிரியர் எ.சிற்றம்பலம் விசேட உரையாற்றவுள்ளனர்.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் எதிர்கால சந்ததியினரின் உரிமைக்காக அகிம்சை வழியிலும் அறவழியிலும் போராட அணி திரளவும்.

பொதுமக்களுக்கான போக்குவரத்து தாகசாந்தி, சிற்றுண்டி முதலானவற்றிற்காக வசதி படைத்தவர்களினது உதவியை கிழக்கு எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் கோருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட அதிகளவான பேருந்து வண்டிகள், வாகனங்கள் தேவைப்படுவதனால் பேருந்து உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கான பங்களிப்பினை வழங்க முன்வரவேண்டும்.

இத்தகைய உதவிகளை வழங்கவிரும்புவோர் 0710145723, 0771274651 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது புகையிரத வீதியில் கூட்டுறவு நிலைய 01ஆம் அறையில் எழுக தமிழுக்காக திறக்கப்பட்டுள்ள தற்காலிக காரியாலயத்தில் காலை 09மணி முதல் பகல்01 மணி வரையிலும் மாலை 03மணி தொடக்கம் 05மணி வரை தொடர்புகொண்டு வழங்கமுடியும்.

எழுக தமிழ் நடைபெறும் தினத்தன்று வியாபார நிலையங்கள்,தனியார் நிறுவனங்கள்,தனியார் கல்விச்சாலைகளை மூடி இந்த அகிம்சை போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.