மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலே பொருளாதார மீட்சியை முன்னிறுத்தும்.

181 0

அரசியலமைப்பின் மூலமான பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைகளாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாடு பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்நெருக்கடியிலிருந்து சமூகத்திலுள்ள பின்தங்கிய பிரிவினரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள், உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகிய கட்டமைப்புக்களின் மூலமான உதவிகள் என்பன தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்ததுடன், இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்படக்கூடிய வறுமை, மந்தபோசணைக்குறைபாடு உள்ளிட்ட சமூக ரீதியிலான தாக்கங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்களை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் அதேவேளை, சமூகத்திலுள்ள பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

இருப்பினும் அரசியலமைப்பின் மூலமான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகியவையே கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் திறவுகோளாகும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.