இலங்கைக்கு சீனாவிடமிருந்து மானியமாக அரிசி : சீன தூதரகம்

161 0

சீனாவிடமிருந்து மானியமாக இலங்கைக்கு அரிசி கிடைக்கப் பெறவுள்ளது. 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25 ஆம் திகதியும் , இரண்டாம் கட்டம் 30 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

குறித்த அரிசி தொகையில் 10 000 மெட்ரிக் தொன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்சினையால் நெற் பயிர்ச்செய்கை குறைவடைந்துள்ளது. இதனால் பெறுமளவான அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  அதற்கமைய கடந்த மாதம் தமிழ் நாட்டு அரசிடமிருந்து 40 000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவும் அரிசியை வழங்கி இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.