அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்

191 0

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது.

ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று துப்பாக்கி வன்முறைக்கு எதிராக கோஷமிட்டனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணிகளும் நடைபெற்றன.