மெரினா கடற்கரையில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்

265 0

சென்னை மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நிலைமை கட்டுக்குள் இருப்பதால் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது என்று  ஜார்ஜ் கூறியுள்ளார். சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை போராட்டம் நடத்த தடை நீடிக்கிறது. மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் ஆணையர் ஜார்ஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் கொண்டுவர கோரி மாணவர்கள், இளைஞர்கள் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், நிரந்தர சட்டம் கொண்டு வர கோரி இளைஞர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதை கண்டித்து சென்னை முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக, அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பலரை கைது செய்தனர். இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் கட்சி துவங்குவதற்காக மீண்டும் மெரினாவில் கூடுவதாக தகவல் பரவியது. இதனால், கடந்த 28ம் தேதி நள்ளிரவு முதல் வரும் 12ம் தேதி வரை மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை திரும்பப்பெறுவதாக சென்னை ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.