முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த கோரி குரவில் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்னால் பெற்றோர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
இன்று(8) பாடசாலை முடிந்த நேரம் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
போதை பொருட்கள்
இதன்போது, “மாலை வேளையில் பெண்கள் வீதியில் செல்ல முடியாத நிலை என்றும் 400ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் 250 ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் மத்தியில் ஜஸ்,கெரோயின்,கஞ்சா பாவனை அதிகமாக காணப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்த பயனும் இல்லை. போதைப்பொருள் அற்ற கிராமமாக எங்கள் கிராமம் காணப்படவேண்டும்.
பெண்களின் நிலை
போதைப்பொருள் பாவனையால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். சிறு பிள்ளைகளை இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
எனவே கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த வேண்டும்.” என ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.