மே 9 வன்முறைகள் : 2,225 பேர் இதுவரை கைது ; 1,010 பேருக்கு விளக்கமறியல்

403 0

கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்துமீறிதாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே 9 வன்முறைகள்) தொடர்பில் நேற்று (01) நண்பகலாகும் போது  சுமார் 2,225 பேரை  பொலிஸார் கைது செய்திருந்தனர்.

நாடளாவிய ரீதியில்  இதுவரை பதிவானதாக 856 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில்,  அவை தொடர்பில்  இவர்களைக் கைது செய்ததாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 2,225 பேரில் நேற்று நண்பகல் 12.00 மணி வரை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு  1,010 பேர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம  மீதான அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்பில்  சி.ஐ.டி.யின்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது.

இந்நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில்  மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழும் மாவட்டங்களின் பிரதிபொ பொலிஸ் மா அதிபரின் கீழும் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப்  பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த 2,225 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அரசியவாதிகள் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே பெரும்பாலான கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதனைவிட, பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் இதுவரை 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளதுடன் அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்  இடையே சிக்கிய போது கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு மேலதிகமாக அவரது மெய் பாதுகாவலரான  அஹங்கம விதானகே ஜயந்த குணரத்ன எனும் பொலிஸ் சார்ஜனும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.