முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு

193 0

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடல் கோட்டா கோ கம போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தின் பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் கூடாரங்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனையடுத்து நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்ததுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு, தீயிடப்பட்டன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடல் வன்முறை சம்பவங்களை தொடர்பில் ஏற்கனவே சில அரசியல்வாதிகளை கைது செய்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு தற்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.