பின்னை இட்ட தீ தென் இலங்கையில் ….

694 0

தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’, சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் ஒன்றாம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழநாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது. ஆம், சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன.

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது; யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடமும் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் போன்றவை இங்குப் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.

சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவுச் சமூகத்தால் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுப் போற்றப்பட்டது; அதைவிட முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியாக யாழ் நூலகம் விளங்கியது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஓர் இனத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்த நூலகத்தைத்தான் சிங்களப் பேரினவாதிகள் திட்டமிட்டு அழித்தனர். யாழ்ப்பாணம் நூலக எரிப்பு என்பது ஒரு தனி சம்பவமல்ல; அது ஈழ தமிழர் பிரச்னையில், தமிழர்களை உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஒரு வரலாற்று நிகழ்வு. ஆகும்.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே !

எனும் பட்டினத்தார் வரிகள் மிகச்சரியான பொருத்தமாக உள்ளது.

அன்று எம் ஞானத்தாயின் மீது சிங்களப் பேரினவாதிகளால் தீ ழூட்டப்படது அந்த தீ அனுமானின் வாலில் ழூட்டிய தீ யைப் போல் தென் இலங்கையை எரிந்து கொண்டிருக்கிறது.

” தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் “ என பட்டினத்தடிகளார் கூறியது எமது மண்ணில் பொய்த்து போகவில்லை.