நாட்டில் நிலவிய கடந்த காலத்தின் குறைபாடுகளை போக்கும் வகையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒரு சிறந்த தொடக்கமாகும்.
மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை ஆதரிக்கவும் 21 ஆவது திருத்த்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
;அத்தோடு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது குறித்து எதிர்மறையான நிலைப்பாடுகளையே முன்வைத்துள்ளன.
இந்நிலையிலேயே டுவிட்டர் பதிவொன்றை இட்டு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் , ‘ இலங்கையின் முன்னேற்றம் அரசியலமைப்பால் பின்தள்ளப்பட்டது. திருத்தங்களானவை தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை மனதில் கொண்டு நிறைவேற்றப்பட்டன.
அந்த மோசமான கடந்த காலத்தின் குறைபாடுகளை போக்க தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் ஒரு நல்ல தொடக்கமாகும்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் அனைத்துக் கட்சிகளும் 21 ஆவது திருத்தத்தை ஆதரிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

