7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுப்பு – டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தடை விதித்தது கோர்ட்

270 0

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.

மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதற்கு சில நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் சீட்டில் பெடரல் கோர்ட்டில் டிரம்ப் தடை உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் பாப் பெர்குசன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் இடைக்கால தடை விதித்தது.