பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்புவேன் பெரும்பான்மையை பாராளுமன்ற அமர்வின் போது பார்க்கலாம் – பிரதமர் ரணில்

138 0

நாட்டின் பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்புவேன். பாராளுமன்றத்தில் அனைவரதும் ஒத்துழைப்புடன் பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ‘கோட்டா கோ கம’ மீது கைவைக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை காணப்படுவதாகவும் , பாராளுமன்ற அமர்வின் போது அதனை பார்க்க முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கொள்ளுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையில் விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

கேள்வி : பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா?

பதில் : பாராளுமன்றம் கூடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்வி : நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு உங்களிடமுள்ள வேலைத்திட்டங்கள் என்ன?

பதில் : பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்ப வேண்டும். காரணம் மக்கள் மிகுந்த நெருக்கடியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எதிவரும் சில மாதங்களில் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறிருப்பினும் நாம் அதிலிருந்து மீள வேண்டும். அவ்வாறு மீளெழுவதற்காகவே நான் பதவியேற்றிருக்கின்றேன்.

எவ்வாறிருப்பினும் எமக்கு இதனை தனியாக செய்ய முடியாது. ஏனைய நாடுகளிடமிருந்தும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் மூன்று வேளையும் உணவுன்னும் இனமாக வேண்டும். ரூபாவிற்கென பெறுமதி இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று வேண்டும்.

 கேள்வி : நாளை  அமைச்சரவை நியமிக்கப்படுமா?

பதில் : இல்லை. நாளை  இடம்பெறாது.

கேள்வி : போராட்டத்திற்கு என்ன ஆகும்?

பதில் : ‘கோட்டா கோ கம’ மீது கைவைக்க மாட்டோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பொலிஸாரும் அதனை செய்ய மாட்டார்கள்.

கேள்வி : ‘ரணில் கோ கம’ உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

பதில் : என்னுடைய வீட்டு வளாகத்தில் நின்று கொண்டு ‘ரணில் கோ ஹோம்’ என்று கூச்சலிட்டனர். வீட்டிலிருந்து கொண்டு எங்கு செல்வது என்று திகைத்துவிட்டேன்.

கேள்வி : எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பீர்கள் ?

பதில் : எனக்கு பெரும்பான்மை இருக்கிறது. நான் உங்களிடம் கேட்கின்றேன் (ஊடகவியலாளரிடம்) நாட்டு மக்களின் துன்பத்திற்கு தீர்வு வேண்டுமா இல்லையா? குறுகிய அரசியலில் ஈடுபடுவதற்காக மூன்று வேளையும் உண்பதற்கு இல்லை என்றாலும் சரியென்றா கூறுகின்றீர்கள்? எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையும் நான் பெற்றுக் கொடுப்பேன். பாராளுமன்றத்தில் அனைவரதும் ஒத்துழைப்புடன் இதனை செய்து காண்பிப்பேன் என்றார்.