அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம்-மைத்ரிபால சிறிசேன

272 0

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவையும், வாட்டுத் தொகுதியையும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் அனைத்துக் குறைபாடுகளும் முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவ்விமர்சனங்களைச் சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டைத் துண்டாடாத வகையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.