ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்திக்கும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடஉள்ளார். மேலும், 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளார்.
ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.
மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

