கர்தினாலை விசாரிப்பது தொடர்பில் சி.ஐ.டி.யினருடன் கலந்துரையாடல் : பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன

304 0

;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், அவரை அழைத்து விசாரிப்பது தொடர்பில் சி.ஐ.டி.யினருடன்  கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற, ; உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவினை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

;பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவின்  தலைமையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல ஜகத் டயஸ், ; பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்ன சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர் ; பங்கேற்றனர்.

இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற தாக்குதலை எம்மால் மறக்க முடியாது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது, தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. ; இந்த பேரழிவிற்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது. சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தெளிவாகின்றது. அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரம் போதுமானதல்ல,

அரசாங்கத்தை சரியாக நிர்வகித்து அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்தாது, முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என நீர்கொழும்பு ; கிரீன்ஸ் விதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு செயலர் கமல் குணரத்ன, ‘ சிங்கள பெளத்தர் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்க ; 8 முஸ்லிம்கள் தமது உயிரை துறப்பார்களா? ‘ என  கேள்வி எழுப்பியதுடன் ; உயிர்த்த  ஞாயிறு தாக்குதலுக்கான காரணம், அதற்காக தேவாலயங்கள், ஹோட்டல்கள் ஏன் தெரிவு செய்யப்பட்டன ; என்பதற்கு, பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீம் தாக்குதலுக்கு முன்னர் வெளியிட்ட ஒளிப்பதிவின் செம்மைப்படுத்தப்பட்ட இருவெட்டு ஒன்றினை முன் வைத்து பதிலளித்தார்.

தான் அரசியல் பேச விரும்பவில்லை என இதன்போது குறிப்பிட்ட பாதுகாப்பு செயலர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில், தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான எந்த தேவையும் இருக்கவில்லை என குறிப்பிட்டதுடன், 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகளிலேயே, தற்போதைய அரசாங்கத்துக்கு பெரும் ஆதாரவு இருப்பது உணரப்பட்டதாக கூறினார்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்  தொடர்பில்  மொத்தமாக 735 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 196 பேர் தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும், ; 81 பேருக்கு எதிராக கம்பஹா, கொழும்பு, கண்டி, குருணாகல், புத்தளம்  நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்  குறித்த விசாரணை விரைவு படுத்தப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 170 பேர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் பாதுகாப்பு செயலர் கூறினார். அவர்களில் 45 பேர் விளக்கமறியலில் உள்ளதாகவும், ; 13 பேரிடம் தடுப்புக் காவலில் விசாரணை நடப்பதாகவும், ; 30 பேர் பிணையில் உள்ள நிலையில்  6 பேருக்கு குற்றப் பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ;இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளுக்கான கரணம், சஹ்ரான் ஹஷீம் தொடர்பில்  சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவும் கருத்துக்களை முன் வைத்தார்.

;இந்த தாக்குதலின் பின்னணியில், தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான  முயற்சிகள் இருக்கவில்லை என்பதை மறைமுகமாக வலியுறுத்திய அவர், இதற்காக ; அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவன விசாரணை அறிக்கை, லொஸ் ஏஞ்சலீஸ்  நீதிமன்றில்  அந் நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்களம்   நெளபர் மெளலவி, ரிஸ்கான், மில்ஹான் ஆகிய மூன்று இலங்கையர்கலுக்கு எதிராக ( உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர்.) தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணத்தை  முன்னிறுத்தினார். ; இந்த தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நெளபர் மெளலவியே என அவர் வலியுறுத்தினார்.