சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து , ஐக்கிய இராச்சியம் என்பவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது
ஒன்று கூடும் சுதந்திரமும் , கருத்து சுதந்திரமும் அமைதியாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் , அவை எந்தவொரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும்.
எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மையான முன்னெடுப்பாகக் கருதுகின்றோம்.
இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாய வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன், உரிய அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத்தன்மையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

