மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் தொடர்ந்தும் விளக்கமறியல் (காணொளி)

281 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளும், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி எஸ்.சதீஸ்கரன், சந்தேக நபர்களை மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல் ஏதாவது விடுக்கப்பட்டால், அதுகுறித்து பொலிஸ் நிலையங்களில் முறையிடுவதுடன், நீதிமன்றுக்கும் தெரியப்படுத்தலாம் என்று நீதிவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பில் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவருகின்றனர்.