பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

238 0

பேரணி நடந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிரதமர் இம்ரான்கான் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இ்ம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என நம்பப்படுவதால் இம்ரான்கான் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக இஸ்லாமாபத்தில் பிரமாண்ட பேரணி நடத்த தனது ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இஸ்லாமாபாத்தில் நேற்று மாலை இந்த பேரணி தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தில் குவிந்தனர். இதில் அந்த நகரமே ஸ்தம்பித்தது. இம்ரான்கானுக்கு ஆதரவான மத்திய மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த பேரணியில் பங்கேற்னர்.

பேரணி நடந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிரதமர் இம்ரான்கான் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளை இம்ரான்கான் கடுமையாக சாடி பேசினார்.